திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்களை தர்மகர்த்தா சபையே தொடர்ந்து பரிபாலிக்க திருகோணமலை மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிடுள்ளது. அத்துடன் கன்னியா பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடையும் விதித்தது.
கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயம் ஆகியவற்றின் தர்மகர்த்தா சபையினால், திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கின் மனு மீதான விசாரணை இன்று திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞசெழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் முன்னிலையாகினர். மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை தொடர்ந்து, மேல்நீதிமன்றம் சில இடைக்கால கட்டளைகளை வழங்கியுள்ளது.
அதனடிப்படையில், கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் அமைக்கப்பட்டு வரும் விகாரையின் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டது
கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம், மாரியம்மன் ஆலயம், மற்றும் அதற்கு சொந்தமான மற்ற வழிபாட்டிடங்களிற்கு பக்தர்கள் போய் வருவதையும், சமய அனுட்டானங்கள் செய்வதையும் யாரும் தடை செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேவேளை, கடந்த வாரம் கோகிலரமணி அம்மையார் , தென் கையிலை ஆதீனத்தை சேர்ந்த அகத்தியர் அடிகளார் ஆகியோருக்கு எதிராக
மேற்கொள்கொள்ளப்பட்ட அநாகரீக செயற்பாடு தொடர்பாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, வழக்கு விசாரணைகளில் இவ்விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.